• 19 Apr, 2026

அறிகுறி இல்லாமல் இதய நோய்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அறிகுறி இல்லாமல் இதய நோய்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவை–திருப்பூர் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அறிகுறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களில் நான்கில் ஒருவருக்கு ஆரம்பக்கட்ட இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதய நோய்கள் நகரங்களில் வாழ்பவர்களுக்கு மட்டுமே அதிகம் ஏற்படும் என்ற பொதுவான கருத்து தற்போது மாறி வருகிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட ஆய்வு இதை தெளிவுபடுத்தியுள்ளது.

KMCH Hospital மற்றும் அதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ‘REACH Rural India’ என்ற பெயரில் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற The Lancet மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புறங்களில் 35 முதல் 65 வயதுக்குட்பட்ட 3,000-க்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. ‘CAC score’ எனப்படும் நவீன பரிசோதனை மூலம் ரத்த நாளங்களில் சுண்ணாம்புப் படிவங்கள் உள்ளதா என கண்டறியப்பட்டது.

 

Screenshot 2026-02-26 154907
 

 

 

அதன்படி, எந்த அறிகுறிகளும் இல்லாமல் ஆரோக்கியமாகத் தோன்றும் கிராமப்புற மக்களில் 25.6% பேருக்கு (நான்கில் ஒருவர்) இதய ரத்த நாளங்களில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. மேலும், இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் 83% பேருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு போன்ற குறைபாடுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதய நோய் இனி நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருவதாக ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வு முடிவுகள் மக்களை பயமுறுத்துவதற்காக அல்ல, மாறாக ஒரு எச்சரிக்கை மணி என மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்கூட்டியே பரிசோதனை செய்து கண்டறிந்தால் மாரடைப்பு ஏற்படும் முன்பே அதைத் தடுக்க முடியும். உணவு பழக்க மாற்றம், உடற்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.